இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள் அண்மையில் (06) கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை பாராளுமன்றத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, கௌரவ (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான இருதரப்பு உறவை உறுதிப்படுத்தினார். பாராளுமன்றங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், கௌரவ சபாநாயகருக்கு இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.
இலங்கை பாராளுமன்றத்துக்கு ஒத்துழைக்கும் வகையில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற பணியாளர்களுக்கும் இந்தியாவினால் பயிற்சி மற்றும் திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ளும் திட்டம் தொடர்பில் உயர் ஸ்தானிகர் குறிப்பிட்டார். அத்துடன், பத்தாவது பாராளுமன்றத்தில் இலங்கை – இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கு சபாநாயகரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பயனுள்ள கொள்கை வகுப்பில் பெண்களின் பங்கை மேம்படுத்தவும் இரு பாராளுமன்றங்களின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் குழுக்களிடையே நெருக்கமான தொடர்புகளை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான மற்றும் கலாச்சார ரீதியான நட்புறவை நினைவுபடுத்திய கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்ன, பல்வேறு துறைகளில் இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆதரவுகளுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலில் பொருளாதார மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
The post இந்திய உயர்ஸ்தானிகர், கௌரவ சபாநாயகர் (வைத்திய கலாநிதி) ஜகத் விக்ரமரத்னவை சந்தித்தார் appeared first on PFP News.